பேரன் பேத்திக்கு கூட கல்யாணம் ஆயிருச்சு
புத்தி தான் இன்னும் வந்த பாடில்ல..
பெரிய மனுசன் செய்ற சோலியா இது
செய்றதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு
வயசான காலத்துல வெந்ததை தின்னமா
கெடந்தமான்னு இல்லாமா??
இந்த சோலி தேவையா ஒனக்கு? ஊர் வம்பு
இழுக்கறதே பொழப்பா போச்சு
யார் யாருக்கோ வருது ஒனக்கு
வர மாட்டக்கே??
சாகறதுக்குள்ள இன்னும் எங்கள என்ன
பாடு படுத்த காத்திருக்கியோ?????????
புதன், 21 ஏப்ரல், 2010
செவ்வாய், 20 ஏப்ரல், 2010
குறிஞ்சிப்பூ
சூர்யவம்சம் படத்தில் சரத் "நான் வேணா படிக்காத முட்டாளா இருந்துட்டுப் போறேன் நீ ஏன் படிச்சும் முட்டாளா இருக்கனும்" டயலாக் சொல்லி தேவயானியை ஐஏஸ் படிக்க அனுப்புவார்.அவங்களும் சமர்த்தா போய் படிச்சு பாஸ் பண்ணி ஒரு பாட்டு முடியரக்குள்ள கலெக்டர் ஆகி அவங்க ஊருக்கே வந்துருவாங்க.
நிஜத்தில் எத்தனை பேருக்கு நடக்கும்?
ஒரு பெண் கணவனின் உற்சாகத்தாலும்,உறுதுணையாலும் டெபுடி கலெக்டராக ஜெயித்த கதை இந்த வார குமுதத்தில் வந்துள்ளது.
அதிகம் படிக்காத கணவன், வசதி வாய்ப்பும் இல்லை.... கலெக்டர் ஆகும் கனவை மறந்து இனி பிள்ளை குட்டிகளை பெற்று கொண்டு வாய்க்கும், வயிற்றுக்கும் கஷ்டப்படும் ஏழ்மை தாயாகவே காலத்தை தள்ள வேண்டியதாகிவிடும். என்ற பயம் தான் திருமணமான புதிதில் துர்காவின் அடிமனதில். கூடவே ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியும், தன்னம்பிக்கையும் இருந்தது. அது தான் இன்று அவரை ஒரு டெபுடி கலெக்டராக உருவாக்கியிருக்கிறது.
கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவி கிராமம் தான் என் அப்பாவோட பூர்வீகம். ஆனா, நான் பிறந்தவுடனேயே எங்க குடும்பத்துடன் மதுரைக்கு நகைப்பட்டறை வேலைக்காக அப்பாவுடன் வந்துட்டோம்.எனக்கு திருணம் முடிந்த ஊரு கரூர் அரவக்குறிச்சி. பிளஸ்டூ படிக்கிற போதே கல்யாணம் பேசிட்டாங்க. அப்புறம், கெஞ்சி, கதறி கேட்டுட்டு டிகிரி முடிச்சேன்.நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. ரெண்டு தம்பிங்க. ரெண்டு பேருமே எய்த்துக்கு மேல படிக்க முடியல. கல்யாணம் வரைக்கும் சும்மா படிக்கட்டும். பொம்பள புள்ளைன்னு என்ன படிக்க வச்சாங்க. நான் விமலா ஸ்கூல்ல டென்த்லயும் பர்ஸ்ட், மதுரை மீனாட்சி காலேஜ்ல பி.எஸ்.சி. மேத்தமடிக்ஸ் படிச்சேன். லாஸ்ட் எக்ஸாம் நடக்கிறலோதே கல்யாணம். காலேஜ்லயும் பர்ஸ்ட் வரணும் நினைச்சேன். 5 மார்க்குல செகண்டா வந்தேன்.
என் கணவர் நகை வேலை செய்யும் ஏழைத்தொழிலாளி என்பதால் கல்யாணத்துக்கு பின் மூன்று வருடம் என் கலெக்டர் கனவுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு ரெண்டு வயசு வரைக்கும் பையனை வளர்த்தேன். அப்புறம் ஐ.ஏ.எஸ். படிக்கணும்னு முயற்சி எடுத்தேன். இனி இழந்தையை நாங்க வளர்த்துகிறோம். நீ படிக்க போன்னு கணவரும், அப்பாவும் தைரியம் சொல்லி உற்சாகப்படுத்தினாங்க.
டெல்லியில் எட்டு மாசம் கோச்சிங் கிளாஸ் போனேன். மூணுமுறை ஐ.ஏ.எஸ். எழுதியும் ரிசல்ட் பெயில் தான். ஒவ்வொரு ரிசல்ட் அப்பாவும் குடும்பமே ஒண்ணு கூடி எதிர்பார்ப்போம். ஆனா, ரிசல்ட் வராது. உட்கார்ந்து அழுவேன். ஒரு தடவை யாருமே இல்ல. பையன் மட்டும் தான் இருந்தான். நான் அழுகிறத பார்த்து அவன் தான் கண்ணீரை துடைச்சு ஆறுதல் சொன்னான். அழாதீங்க அம்மா. அடுத்து பாஸ் ஆவீங்கன்னு சொல்லி கட்டி பிடிச்சு ஆறுதல் சொன்னான்.
சரி, இனி குரூப் ஒன் தேர்வு எழுதலாம்னு முடிவு பண்ணினேன். இரண்டு வருஷம் கழித்து ரிசல்ட் வந்தப்போ, நான் டெபுடிகலெக்டர் ஆகிவிட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. நைட் எல்லாம் தூக்கமே வரலை.
எல்லா ஆணின் வெற்றிக்கு பின்னாடி பெண் இருப்பதாக சொல்வாங்க. ஆனா, என்னோட இந்த முயற்சிக்கு முழுசா நம்பிக்கை கொடுத்தது என் கணவர் தான்.
நம்ம மண்ணுலயே டெபுடி கலெக்டராகி ஒர்க் பண்ற வாய்ப்பும் கெடைச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு என்று தன் மொத்த வாழ்க்கையையும் சொன்ன துர்காவின் கண்களில் நம்பிக்கை ஒளி.
திங்கள், 19 ஏப்ரல், 2010
திருப்பூர் வாழ் இளைஞரணி நடத்தும்...........
அருள்மிகு ஸ்ரி காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு,இன்று இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக,திருப்பூர் வாழ் இளைஞரணி நடத்தும் டிவி புகழ் செவன் ஸ்டார் குழுவினரின் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி இரவு சரியாக 9 மணியளவில் கோயில் முன்பாக அமைந்திருக்கும் திடலில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கும் படி விழாக் கமிட்டியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
அடிக்கடி கம்பெனி விளம்பரமும் ஒலிக்கும்.உங்கள் இல்லங்களில் நடைபெறும் திருமண விழா,புதுமனை புகு விழா,காதணி விழா மற்றும் புப்புனித நீராட்டு விழா(?) போன்ற விழாக்களுக்கு குறைந்த செலவில் சிறப்பாக ஒலி ஒளி அமைத்திட அணுகுவீர் ராசாத்தி சவுண்ட் சர்வீஸ்
ராசாத்தி சவுண்ட் சர்வீஸ் ராசாத்தி சவுண்ட் சர்வீஸ் (எக்கோ).மைக் செட் அலறிக் கொண்டே இருக்கும்
ஊரில் வைகாசி மாதம் காளியம்மன் கோயில்,மாரியம்மன் கோயில்,காச்சகாரியம்மன் கோயில் என எல்லா அம்மன் கோயில்களுக்கும் திருவிழாக் காலம்.
செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கும் திருவிழா ஒரு வாரம் நடை பெறும்.அதற்கு முந்தின செவ்வாய்க்கிழமை கோயிலில் கொடியேற்றி காப்பு கட்டுவார்கள்.காப்பு கட்டிய பின்பு யாரும் வெளியூர் சென்றால் தங்க மாட்டார்கள் எவ்வளவு நேரமானாலும் ஊருக்கு வந்து விடுவார்கள்.இது இன்று வரை தொடர்கிறது.
அன்று மதியமே மேளக்காரர்கள் வந்துடுவாங்க.6 மணி வாக்கில் ஆரம்பிக்கும் சாமிக்கு அருளேற்றும் வைபவம்,ஊரில் சாமி கொண்டாடி என சிலர் இருப்பாங்க.பரம்பரையாக அவர்கள் தான் ஆடுவாங்க.பூசாரி எல்லா சாமி கொண்டாடிகளுக்கும் திறநீறு பூசுவாரு.கொஞ்ச நேரம் விரைப்பாக நிற்பார்கள்,சாமியை கும்பிட்ட படி.மேளத்துக்கு தக்கவாறு மெல்ல ஆரம்பிக்கும் ஆட்டம் சிறிது நேரத்தில் சூடு பிடித்து விடும்.காளியம்மன் சாமி ஆடுபவர் கையில் தீச்சட்டியும்,கருப்பசாமி ஆடுபவர் கையில் ஈட்டி கம்பும் (கம்பு முழுவதும் சின்ன மணிகள் கட்டப்பட்டிருக்கும்)கொடுக்கப் படும்.
பின் இரவு 11 மணிவாக்கில் வடக்கத்தி அம்மனை கும்பிட போவாங்க.ஊருக்கு வெளியே ஒரு அரை கிலோ மீட்டர் தாண்டி ஒரு வேப்ப மரத்தின் அடியில் ஒரு சாமி சிலை இருக்கும்.அது தான் வடக்கத்தி அம்மன்.மேளதாளத்தோடு ஊர்வலமாக சென்று வடக்கத்தி அம்மனை கும்பிட்டு விட்டு தெருவில் (தெரு என்றால் ஒரு குறிப்பிட்ட சமூகம் என்று கொள்க) உள்ள எல்லா வீட்டுக்கும் ஊர்வலம் செல்லும்.
எல்லா வீட்டிலும் சாமிகளை குளிப்பாட்ட குடத்தில் மஞ்சள் கரைத்த நீரும்,குடிப்பதற்கு பானகம் (புளித்தண்ணிரில் கருப்பட்டி சேர்ந்தது)வாசலில் வைத்து காத்திருப்பார்கள்.சாமி வந்தவுடன் குடத்து நீரை அப்படியே தலையில் ஊற்றி,பானகம் குடுத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்வார்கள்.சாமிகள் கொஞ்சம் தான் பானகம் குடிக்கும் மீதி எல்லாம் கூட வருகிற ஆசாமிகளுக்கு.இப்படியே சாமியாட்டம் முடிய காலை 4 மணி ஆயிரும்.
இதே இரவு சாமி ஊர்வலம் சென்றதும் கோயில் முன் முளைப்பாரி சட்டிகளை வைத்து அதைச் சுற்றி வட்டமாக பெண்கள் நகர்ந்து கொண்டே கும்மி (இது பதிவுலக கும்மி அல்ல)அடிப்பார்கள்.சுப்பிரமணியபுரம் படத்தில் கூட வருமே அது.
புதன் கிழமை காலையில் கோயிலுக்கு முன்பு வரிசையாக கல் அடுப்பு வைத்து பொங்கல் வைப்பார்கள்,மொத்தமாக ஒரே இடத்தில் அம்பது அறுபது அடுப்புகளில்.பொங்கல் வைத்து முடிந்த பின் மேளக்காரர்கள் ஊர்வலமாக சென்று மாவிளக்கு நேர்ந்த பெண்களை அழைத்து வருவார்கள்.மாவிளக்கு என்பது அரிசி மாவில் கருப்பட்டி பாகு சேர்த்து பிசைந்து நடுவில் சிறிய பள்ளம் உண்டாக்கி அதில் நல்லெண்ணெய் விட்டு திரி போட்டு விளக்கெரிய விடுவார்கள்.
பொங்கல் பானை,மாவிளக்கு எல்லாவற்றையும் சாமிக்கு படைத்து பூஜை எல்லாம் முடிந்த பின் அடுத்து ஆரம்பிக்கும் கெடா வெட்டு வைபவம்.கோயிலுக்கு நேர்ந்து விட்ட ஆடு,சேவல் எல்லாம் வரிசை கட்டி நிற்கும்.கெடா வெட்டுபவர் சாமி கும்பிட்டு கையில் பள பள வென்ற அரிவாளோடு தயாராக இருப்பார்.
பலி ஆடை சாமியை நோக்கி நிற்க வைத்து ஒரு குடம் மஞ்ச தண்ணீர் ஊற்றப்படும்.மாலை போட்டு பூசாரியால் திறுநீறு பூசப்படும்.ஆடு பக்கவாட்டில் திரும்பாமல் இருப்பதற்காக,ஆட்டின் உரிமையாளர் ஆட்டுக்கு முன்பாக சிறிது தூரத்தில் நின்ற படி கையில் வேப்பிலை வைத்துக்கொண்டு ஆட்டுக்கு காட்டிக் கொண்டிருப்பார்.ஆடு அந்த பக்கம் இந்த பக்கம் திரும்பி விட்டால் வெட்டு சரியாக விழாது.ஆடு வேப்பிலையை பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரே போடு "சதக்" தலை தனியாக கீழே விழும்.உடம்பு கொஞ்ச நேரம் துள்ளி அடங்கும்.
சேவல் அறுப்பதற்கு தனியாக சின்ன சூரிக்கத்தி வச்சுருப்பாரு.சேவலை உரிமையாளர் பிடித்துக்கொள்ள கர கரனு தலைய அறுத்து எடுத்துட்டு தலையில்லாத சேவலை தரையில் எறிஞ்சுடுவாரு.அது கொஞ்ச நேரம் றெக்ககைகளை அடிச்சு தரையில சுத்தி சுத்தி வரும்,பின் அடங்கிடும்.
அப்புறம் அந்த ஆடு,சேவவெல்லாம் மத்தியான சாப்பாட்டுக்கு குழம்பாகவும்,வருவலாகவும் ஆயிரும்.
மஞ்சள் நீராட்டு, பானை உடைத்தல், கரகாட்டம், வில்லிசைக்கச்சேரி, ஆடலும் பாடலும் எல்லாம் அடுத்த பதிவில்.
டிஸ்கி.எங்க ஊரில் அம்மன் கோயில் திருவிழா நடைபெறும் விதத்தை பகிர்ந்துள்ளேன்.ஊருக்கு ஊர் மாறுபடலாம்.
சனி, 17 ஏப்ரல், 2010
பதிவுலகம் வாழ்க
கட்டுமானத்துறையில் (Oil & Gas) பணி புரிவது ரொம்ப கொடுமையானது,சில நேரங்களில் 18 மணி நேரம் கூட வேலை செய்ய வேண்டியிருக்கும்,மற்ற சில நேரங்களில் சும்மா உட்கார்ந்து பொழுதைப் போக்க வேண்டியிருக்கும்.அதுவும் நான் குவாலிட்டி கண்ட்ரோல் ஆய்வாளராக இருப்பதால் இன்ஸ்பெக்ஷன் இருந்தால் மட்டும் சைட்டிற்கு போனால் போதுமானது,மற்ற நேரங்களில் அலுவலகம் தான்.
தற்போது பணி புரியும் புராஜெக்ட் முடியும் தறுவாயில் உள்ளதால் கடந்த 3 மாதமாக சுத்தமாக வேலை இல்லை,காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நேரத்தை கடத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.முடிந்தவரை எல்லாப் பதிவுகளையும் படித்து விடுவேன் சில நேரங்களில் பழைய பதிவுகளையும்.
கடந்த மாதம் ஒரு நாள் ஐடி டிபார்ட்மென்டிலிருந்து எங்க டீம் லீடர்க்கு ஒரு ஓலை வந்தது.புராஜெக்ட்டில் இணையத்தை அதிகம் உபயோகிக்கும் டாப் 10 நபர்களுள் எங்கள் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த 4 பேர் இடம் பெற்றுள்ளனர் எனவும்,இணைய உபயோகத்தை குறைத்துக் கொள்ளுமாறும் அல்லது இணைப்பு துண்டிக்கப் படும் எனவும் அறிவுறுத்தப் பட்டிருந்தது.
அந்த நாலு மக்களும் என்னை கொடுமையாகப் பார்த்தார்கள்,எப்ப பார்த்தாலும் நீ தான் நெட்ல இருக்க,உன் பேர் வரல எங்க பேர் மட்டும் எப்படி வந்தது என்றனர்.
அதுல ஒரு சேட்டன் நான் பேப்பர் மட்டும் தான் படிப்பேன்,அப்புறம் கொஞ்ச நேரம் வீட்டுக்கு பேசுவேன் என் பேரும் வந்திருச்சே என்றார்.(கொஞ்ச நேரம்னா சேட்டனோட அகராதில காலையில 2 மணி நேரம்,மாலையில் 2 மணி நேரம் ஜிடாக்ல அதுவும் வெப் கேமோடனு அர்த்தம்)
தமிழ் நண்பர் ஒருவர் அலுவக மெயில் 10 வரிக்கு மேல வந்தாலே படிக்க மாட்டாரு.அது என்ன மேட்டர்னு படிச்சு சொல்லுங்கன்னு நமக்கு அனுப்புவாரு,அவ்ளோ பெரிய படிப்பாளி.வண்ணத்திரைல படம் பாக்குறது (படம் மட்டும்) தமன்னா,நமீதா படம் டவுன்லோட் பண்றதுனு தன் நேரத்தை உபயோகமா செலவிடுவார்.
நான் அவரைக் கூப்பிட்டு அண்னண் உண்மைத்தமிழன் அவர்களின் மானிட்டர் பதிவைக் காமிச்சேன்.
யோவ் என்ன இவ்ளோ பெரிசா இருக்கு என்ன மேட்டரு?
அது ஒன்னுமில்ல அவரோட மானிட்டர் ரிப்பேர் ஆயிருச்சாம் அதத்தான் அண்னண் சுருக்கமா எழுதியிருக்காரு என்றேன்.
மானிட்டர் ரிப்பேர் ஆனதுக்கு இவ்ளோ பெரிசா மிரண்டு விட்டார் நண்பர்.
இப்ப தெரியுதா என் பேர் ஏன் வரலைனு இவரோட பதிவுகளைப் படிச்சாலே போதும் இன்னும் ஒரு வருஷம் ஓட்டிடுவேன்.உங்கள மாதிரி நான் எந்த டவுன்லோடும் பண்றதில்லேனு சொன்னேன்.
நண்பர்கள் இப்ப மெயில் பார்க்கவும்,பேப்பர் படிக்கவும் மட்டும் இணையத்தை உபயோகப்படுத்துகிறார்கள்,மற்ற நேரங்களில் படம் பார்க்கிறார்கள்.எந்த படத்தையும் விட்டு வைப்பதில்லை ஹர்ட் லாக்கரில் தொடங்கி நம்ம பையா வரை.
நான் மட்டும் வழக்கம் போல.
ஒரு தமிழனை இழிச் சொல்லில் இருந்து காப்பாற்றிய பதிவுலகம் வாழ்க.குறிப்பாக அண்னண் உண்மைத் தமிழன்.அவர் தினமும் இரண்டு பதிவுகள் எழுத வேண்டும் என்று அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.
ஞாயிறு, 11 ஏப்ரல், 2010
எஸ் யுவர் ஹானர்
பெரிய கிழி
தேங்க்ஸ்க்கா
வாவ்
தேங்க்ஸ்க்கா
எக்செலண்ட்
தேங்க்ஸ்க்கா
ராக்கிங் ஃபெர்பார்மென்ஸ்
தேங்க்ஸ்க்கா
சான்ஸே இல்லை
தேங்க்ஸ்க்கா
காஸ்ட்யும் செலக்சன் சூப்பர்
தேங்க்ஸ்க்கா
எக்ஸ்பிரஷன் நல்லாருந்தது டான்ஸ்ல அது தான் முக்கியம்
தேங்க்ஸ்க்கா
ரவி ஒரு இடத்துல லேசா தடுமாறினேயே ஏன் ஸ்டெப் மறந்துட்டியா?
இல்லக்கா மாரிய தூக்கினேன்லே கால்ல சுளுக்கிருச்சு அதான்க்கா
எங்க கால காட்டு
பரவாயில்லை கால் சுளுக்கியும் கூட நல்லா பண்ணியிருக்கே வெரி குட்
******************************************************************************************************************
மோளே
அடிபொலி பெர்மான்ஸ் கேட்டோ
வளர நன்னாயிருந்தது
பச்ச சரணம் பாடும் போது அல்பம் சங்கதி பிசகி மோளே
சங்கதி கலையாம் பட்டில்லோ
அது வலிய தெட்டில்ல கேட்டோ
நமக்கு அடுத்த பிரவாசம் நோக்காம்
ஓகே ஆல் த பெஸ்ட் மோளே
********************************************************************************************************************
நாட்ல ஆறு மணிக்கு மேல ஜட்ஜ்ங்க தொல்லை தாங்க முடியலை சாமியோவ்.......
சனி, 10 ஏப்ரல், 2010
தமன்னாவும்,அங்காடித்தெருவும்.
பையா படம் ரீலிஸ் ஆனதில் இருந்து தினமும் நாள் தவறாமல் இரவு கலைஞர் டிவியில் "அடடா மழைடா அடை மழைடா" பாடல் ஒளிபரப்பாகிறது. (தயாநிதி வாழ்க)
மயில் தோகை போல நீ வளைந்து ஆடும் போது என்ற பாடல் வரிக்கு ஆடும் போது நம் மனதும் ஆடுகிறது.
என் தேவதை எங்கே என் தேவதை எங்கே அது சந்தோசமா ஆடுது இங்கே என்ற பாடல் வரியில் தமன்னா தனித்து ஆடும் போது பளிச் என தெரிகிறது,நான் அருவியைச் சொன்னேன்.
இந்த பாடலைப் பார்க்கும் போது கல்லூரியில் வந்த தமன்னவா என வியக்க வைக்கிறார்.பாரேன் இந்த பிள்ளைக்குள்ள ஏதோ ஒன்னு இருந்திருக்கு!!!!!!!!!!
********************************************************************************************************************
அங்காடித் தெரு இயக்குனர்கள் பார்வையில்(கலைஞர் டிவி) என்ற நிகழ்ச்சியில் அமீர், சசிக்குமார்,சசி,மிஷ்கின், சமுத்திரக்கனி, தங்கர்பச்சான், விக்ரமன் ஆகியோர் பங்கு பெற்று படம் பற்றிய தங்கள் கருத்துக்களை இயக்குனர் வசந்தபாலன் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
கனி தன் தங்கையை வழி அனுப்பிவிட்டு வரும் போது பேசிக் கொள்ளும் காட்சியை தனக்கு மிகவும் பிடித்ததாகவும் காதலை இதை விட இயல்பாக சொல்ல முடியாதெனவும் சசி சொன்னார்.
என்ன பண்ணான் என்ற கதைநாயகனின் கேள்விக்கு என் மாரை பிடிச்சு கசக்கினான் என கனி பதிலளிக்கும் காட்சியும் அதை தொடர்ந்த என்னை செருப்பால அடிச்சுரு கனி என்ற காட்சியும் தன்னை கவர்ந்ததாக மிஷ்கின் குறிப்பிட்டார்.
குறுக்கிட்ட வசந்தபாலன் தான் இந்த வசனத்தை அஞ்சலியிடம் சொல்லப் போகையில் தான் கூசிப் போய் அஞ்சலியின் முகம் பார்க்காமால் திரும்பிக் கொண்டு இந்த காட்சியைப் பற்றி சொன்னதாக கூறினார்.மேலும் இந்த காட்சி ஒரே டேக்கில் ஓகே ஆனது,தான் ரீடேக் எதுவும் கேக்கவில்லை என்றார்.
சசிக்குமார் தனக்கு பிடித்த காட்சியாக நண்பர்களுக்கிடையே நிகழும் அந்த மழை நேர உரையாடலை சொன்னார்.இந்த படத்தில் நட்பும் இருக்கிறது என அவர் சொன்ன போது,மற்ற எல்லாரும் "நட்பு" பற்றி நீங்க சொன்னா சரியா இருக்கும் என்று கலாய்த்தார்கள்.
வசந்தபாலன் பேசுகையில் பாடல்கள் ஒரு படத்தை தாங்கும் பில்லர்கள் என தன் குரு ஷங்கர் குறிப்பிடுவார் எனவும்,தான் பாடல்களுக்காக மிகவும் மெனக்கெடுவதாகவும் குறிப்பிட்டார்.
அழகியில் ஆரம்பித்த மாற்று சினிமா,காதல்,வெயில், பருத்திவீரன், சுப்ரமணியபுரம்,நாடோடிகள் என நீள்கிறது என்ற வசந்தபாலன்,90 களில் இருந்த ஹீரோக்களின் பின்னால் இயக்குனர்கள் தேதி கேட்டு அலையும் பழக்கத்தை அமீர்,சசி,சசிக்குமார் போன்றோர் உடைத்துவிட்டனர்,ஒரு புது ஹீரோ இருந்தால் போதும் படம் பண்ணலாம் என்ற தைரியம் இருக்கிறது, இது தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
**********************************************************************************************************************
ஆங் சொல்ல மறந்துட்டேன்.பையா பாடலைத் தொடர்ந்து "விண்ணைத் தாண்டி வருவாயா" பட பாடல்களும் தினமும் நாள் தவறாமல் இரவு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.
அது சரி தமிழ்ல எவ்வளவோ சேனல் இருக்கும் போது நான் ஏன் கலைஞர் டிவி பார்க்கிறேன்?
ஏன்னா அந்த சேனல் மட்டும் தான் எங்க கேம்ப்ல தெரியுது!!!!!!!!
************************************************************************************************************************
புதன், 7 ஏப்ரல், 2010
பத்ரி"நாட்"
எவன்யா கண்டுபிடிச்சான் இந்த எழவெடுத்த டி20 ஐ னு தனியா புலம்பிக் கிட்டு இருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி மாவீரர் பத்ரிநாத்.அப்போது வணக்கம் சார் என்ற படி வருகிறார்கள் இருவர் கேமராவுடன்.
கேமராவைப் பார்த்தவுடன் பத்ரியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் (மனதுக்குள்) சே ரெண்டு மூணு நாளா எந்த பேப்பர பார்த்தாலும் முரளி விஜயைப் பத்தி பக்கம் பக்கமா எழுதறுனாங்க நல்லவேளை இப்பாவது நம்மள தேடி வந்தாங்களே என்றபடி வாங்க வாங்க என்கிறார்.
சார் நாங்க கேக்ரான் மேக்ரான் பத்திரிகையிலிருந்து வர்ரோம் ஒரு சின்ன பேட்டி வேணும்
ஓ தாரளாமா போட்டோ போடுவிங்க இல்ல? கன்பர்ம் செய்து கொள்கிறார் பத்ரி
இனி பேட்டியிலிருந்து
உத்தப்பா,யூசுப் பதான் போன்ற வீரர்கள் எல்லாம் அதிரடியில் மிரட்டும் போது நீங்க மட்டும் டெஸ்ட் மேட்ச் மாதிரியே விளையாடுறீங்களே ஏன்?
நான் என்ன பண்றது? வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன் பேட்டைத் தொட்டாலே ரஞ்சி(இது அந்த ரஞ்சி இல்ல)தான் ஞாபகம் இருக்கு மீதி எல்லாம் மறந்துறது.அது மட்டுமில்லாம நாலாவது ஆளா தான் பேட் பண்ண விடுறாங்க,டின்னர் கொஞ்சம் ஹெவியா சாப்பிட்டு பெவிலியன்ல உக்காந்து லேசா அசந்தாப்ல இருக்கும் போது எழுப்பி பேட்டிங் பண்ண சொல்றாங்க.களத்துக்கு போனாலும் அசதி போக மாட்டக்கு.விஜய் மாதிரி என்னையும் ஒப்பனிங்கல இறக்கினால் சும்மா பின்னிருவேன்.
அது சரி ஆனா நேத்து மேட்ச்ல தில்ஸ்கூப்,ரிவர்ஸ்விப் எல்லாம் அடிச்சிங்களே?
அதுக்கு பேர்தான் நோகாமா நோங்கெடுக்கிறது.அந்த ஷாட்டுக்கெல்லாம் உயிரைக் கொடுத்து அடிக்க வேண்டாம் பாருங்க லேசா தட்டி விட்டா போதும் பவுண்டரிதான்.
அப்புறம் பந்து ஃபீல்டர் கைக்குப் போனதுக்கப்புறமும் ரன் எடுக்க ஓடப் பார்க்கிறீங்களே அது ஏன்?
சும்மா ஓரே இடத்துல நின்னுகிட்டே இருந்தா தூங்கிடுவேன்.அதுக்காகத்தான் அப்பப்ப ஒரு சின்ன வார்ம் அப்
சிக்சர்னு ஒரு வஸ்து கிரிக்கெட்ல இருக்கு தெரியுமா உங்களுக்கு?
ஆமா லேசா ஞாபகத்துல இருக்கு.ந்ம்ம முரளி விஜய் கூட ராஜஸ்தான் மேட்ச்ல அடிச்சாரே அதானே.எப்படியும் நானும் 2020 ஐபிஎல்லஅடிப்பேன்.
ஐபிஎல்ல உங்க சாதனைன்னு எதை சொல்லுவிங்க?
நான் பேட் பண்ணும் போது தான் அதிகமா சேனல் மாத்தறாங்களாம்.நான் பேட் பண்ணும் போது தான் டிவி ரிமோட் வீட்டுப் பெண்கள் கைக்கு போகுதாம்.அவங்க விருப்பமான சீரியல் பார்க்குறாங்கலாம், இத நான் சொல்லல எனக்கு வர்ற கடிதங்கள் சொல்லுது,தினமும் ஆயிரத்துக்கு மேல வருது.,அதனால தாய்மார்களோட ஆதரவு பெற்ற ஒரே ஐபிஎல் பேட்ஸ்மேன் நான் தான். இதை விட வேற என்ன வேணும்?
பேட்டியை முடிச்சுக்கலாமா என்க்கு பிராக்டிஸ் இருக்கு என்றார் பத்ரி
சார் கடைசியா ஒரு கேள்வி டீம்ல எவ்வளவோ பேர் வெளியில இருக்கும் போது உங்களுக்கு மட்டும் தொடர்ந்து விளையாட சான்ஸ் கிடைக்குதே எப்படி?
எனக்கு,தோனிக்கு ஏன் டீம் மேனஜ்மென்டுக்கே தெரியல.அதுக்காக ஒரு கமிட்டி போட்டிருக்காங்க கூடிய சீக்கிறம் தெரிஞ்டும்.
- சென்னையிலிருந்து காத்தவராயன்
படம் லென்ஸ் பாண்டியன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


.jpg)
